Tuesday, August 19, 2008

தாஃவா - அழைப்புப் பணி

இன்று உலகில் எண்ணற்ற மக்கள் வாழ்க்கையில் வெறுப்புற்று, நம்பிக்கையிழந்து, நிம்மதியின்றி அமைதியை தேடி ஓடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அமைதி கிடைத்தபாடில்லை. ஏனென்றால், அவர்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்காதவரை, அமைதி பெறமாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய முழுமுதற்கடமையை செய்யத்தவறியதன் விளைவே இது. தாஃவா – அழைப்புப்பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை.

தாஃவா என்பது மக்களை அல்லாஹ்வின் பால் அழைப்பது. வணக்க, வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது. அவன் காட்டித்தந்த சீரிய வழியின்பால் வாழ்வது, தீமை மற்றும் இணைவைப்பதைவிட்டும் முற்றிலுமாக விலகுவது ஆகும். இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் - சூரத்துல் அன்பியா – நபிமார்கள் குறித்த அத்தியாயம் 21:வசனம் 25
"(நபியே!) உமக்கு முன்னர் இப்பூவுலகில் வாழ்ந்த நம் தூதர்கள் அனைவரும் உமக்கு வஹீயாக கிடைத்த அதே செய்தியையே அவர்களும் பெற்றார்கள். அதாவது "வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை ஆகவே, அவனுக்கே முற்றிலும் வழிபட்டு நடங்கள்"

எனவே, தாஃவா என்பது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில், சரியான மொழியில், அவர்கள் திருப்தி கொள்ளுமாறு அமைய வேண்டும். மேலும், அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக, அவர்களும் நம்மைப் போன்று நேர்வழியல் சென்று, நாளை மறுமையில் நம்மருகே செர்க்கத்தில் இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தாஃவா செய்ய வேண்டும். இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான், சூரத்துன் நஹல் - தேனீக்கள் பற்றிய அத்தியாயம் 16:வசனம் 125

நபியே நீர் மனிதர்களை விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் பக்கம் அழைப்பீராக - அன்றியும் எது அழகானதோ அதைக் கொண்டு நீர் அவர்களுடன் விவாதம் செய்வீராக!



மேலும் சூரத்துல் ஃபுஸ்ஸிலத் அத்தியாயம் 41:வசனம் 33ல் இறைவன் கூறுகின்றான்

யார் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து, நல்ல அமல்களை செய்து, "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளேன்" என்று கூறுகிறாரோ அவரை விட அழகிய சொல் சொல்பவர் யாருமில்லை

ஆக, இந்த தாஃவா பணியை தனிநபராகவோ அல்லது கூட்டமைப்பாகவோ இருந்து செய்யலாம். தனிநபராக இருந்து செய்வது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அந்நபர் இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக செய்பவர்கள் ஒரு அழைப்பு மையத்தை இஸ்லாமிய அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூகவியாலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அமைக்க வேண்டும். அவர்கள் சொற்பொழிவுகளுக்கு, விவாதங்களுக்கு, ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுவதுமுக்குரிய செயல்களை வகுத்து ஒரு செயல் திட்டம் ஏற்படுத்த வேண்டும். பிற சமயத்தவர்கள் மற்றும் பிறபகுதியிலுள்ள அழைப்பாளர்கள் எந்நேரமும் அணுகி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக செயல்பட வேண்டும். புத்தகங்கள், ஆடியோ, வீடியோ கேஸட்;டுகள் கொண்ட நூலகம் ஏற்படுத்த வேண்டும்.

தாஃவாவின் முதல் பணியாக கலிமா ஸலவாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராகவும், நல்லடியாராகவும் உள்ளார் என்பதாகும். முதலில் கூறவேண்டியது:

1) அல்லாஹ் இருக்கின்றான், அவன் தனித்தவன் (இணைதுனையற்றவன்), அவன் பண்புகள்

2) முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மை, உண்மை

3) திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான அற்புதங்கள், எவ்வாறு அவை பிற்காலத்தில் நிரூபிக்கபட்டன அது உலக மாந்தருக்கு விடும் சவால் 'இது போன்ற புத்தகத்தை உங்களால் இயற்ற முடி யுமா?" என்பது

4) மறுமை நாள், மறுமைய வாழ்க்கை, மீண்டும் அனைவரும் உயிர்தெழுப்பப்படுவது, நியாய தீர்ப்பு வழங்குவது

5) முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களின் தோழர்களுடைய சிறப்புகள், தியாகங்கள்

6) இஸ்லாமிய வாழ்க்கை முறை, அன்றாட பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள்

7) இஸ்லாம் உலகில் ஏற்படுத்திய புரட்சி, தாக்கம்

· சர்ச்சைக்குரிய விசயங்கள், அரசியல்ஈ மற்றும் முஸ்லிம்கள் நம் நாட்டில் படும் துன்பங்கள குறித்தெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது

· நாம் அறியாத விசயங்கள் குறித்து பேசுவதும் கூடாது

· நாம் கூற விரும்புவதை தெளிவாக அழகிய முறையில் எடுத்துக் கூறவேண்டும்.

· நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும்

· நல்லமுறையில் அவர்களிடம் விவாதம் செய்யவேண்டும். நாம் அளிக்கும் பதில் அவர்களை திருப்தி செய்யுமாறு இருக்க வேண்டும்

· தவறுகளை பொறுக்க வேண்டும். பொறுமையோடு அவர்கள் கூறுவதை செவிமடுக்கவேண்டும்

· குர்ஆன் மற்றும் புத்தகங்களை பரிசாக அளிக்கவேண்டும்

· வீண் விமர்சனங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்

· இஸ்லாத்தை மற்றும் நம்மை பிறர் ஏசினால் பொறுமை காக்கவேண்டும்

· உங்கள் சொற்பொழிவில் முரண்பாடு இருக்கவே கூடாது

· நீங்கள் கூறுபவற்றை நீங்கள் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். உதாரணம்: தாடி

· வாக்கு தவறாமை கடைபிடிக்கவேண்டும்

· நாம் அறியாத விசயங்களைக் குறித்து கேட்கப்பட்டால் எதையேனும் கூறி அவர்களை குழப்புவதை விட்டுவிட்டு 'எனக்கு தெரியாது படித்துவிட்டு கூறுகிறேன்" என்று கூறுவதே நேர்மையான சிறந்த பதிலாகும்.

இஸ்லாம் குறித்து பிற சமயத்தவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு கூற விரும்புகிறேன்.

1. இஸ்லாம் என்பது முற்றிலுமாக அல்லாஹ்விற்கு அடிபணிவது

2. அல்லாஹ் என்பது 'ஒரே கடவுள்" என்பதற்குரிய அரபிச் சொல். அவன் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் இறைவன் ஆவான்.

3. இஸ்லாம் முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கம் அல்ல. ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல், முதல் நபி நூஹ்(அலை) தொடர்ந்து வந்த அனைத்து தூதர்களும் போதித்த மார்க்கம் ஆகும்

4. இஸ்லாம் என்பதன் உண்மையான அர்த்தம் சாந்தி, மற்றும் சமாதானம் என்பது குறித்து எடுத்துக் கூறுவது

5. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வாக்கு. மனித குலத்திற்கு அவன் அருளிய இறுதிச் செய்தி

6. இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லை, அனைவரும் சமம்

7. இஸ்லாம் எளிய மார்க்கம், சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது.

8. தனிமனித உரிமைகளை இஸ்லாம் பேனுகிறது. நியாயத் தீர்ப்பு நாளின் முக்கியத்துவம் - ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது

9. இஸ்லாம் மனிதனின் உடல்ரீதியான வெளிப்படையான பிரச்சனைகளுக்கும் உள்ள ரீதியான ஆன்மீகப் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது

10. சில சமூக, நாட்டில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை

11. இன்றைய சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளான வறுமை, வன்முறை, வீடற்றோர், கொலை, கொள்ளை, பாலியல் நோய்கள், மனைவியை துன்புறுத்துவது, குழந்தைகளை வதை செய்வது, குடி, போதை, விபச்சாரம் மற்றும் குடும்பத்தில் பிளவு போன்ற அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் தீர்வு தருகிறது

12. பெண்களுக்கு தனி அந்தஸ்து, கௌரவம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டுள்ளது. பெண்கள் குறித்து ஒரு தனி அத்தியாயமே உள்ளது

சூரா முஹம்மது(ஸல்) அத்தியாயம் 47: வசனம் 38



அவனுடைய கட்டளைகளை நீங்கள் புறக்கணிப்பீர்களானால் உங்களை அழித்து உங்களையல்லாத வேறு சமூகத்தாரை உங்கள் இடத்தில் அவன் மாற்றிவிடுவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்றவராக இருக்கமாட்டார்கள்.

தாஃவா செய்யும் முறைகள், உத்திகள் என்னவென்றால்

1. சிறு சிறு பிரசுரங்கள் பல்வேறு தலைப்புகளில் WAMY, saudi வெளியிடுவது. போன்று. இது போன்ற பிரசுரங்கள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், வார்த்தைகள் அரபியில் இல்லாது அந்தந்த மொழியில் இருத்தல் வேண்டும். உதாரணம் - அல்லாஹ் - இறைவன், ஈமான் - நம்பிக்கை, தக்வா - இறையச்சம், பயபக்தி, நிக்காஹ் - திருமணம், நபி - இறைத்தூதர்

2. புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் வெளியிடுவது

3. பிரசுரங்கள், புத்தகங்களை கிறித்துவர்கள் போன்று நாமாக சென்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஜன நடமாட்டம் உள்ள மார்க்கெட் போன்ற இடங்களில் விநியோகிப்பது

4. புத்தகத்திருவிழா - Book Fair-ல் ஒரு கடையைப் பிடித்து விலை கூடுதலாக உள்ள இஸ்லாமிய புத்தகங்களை சலுகை விலையில் விற்பது – சில சிறு புத்தகங்களை இலவசமாக அளித்து வாங்கத் தூண்டுவது.

5. தெருமுனைப் பிரச்சாரம் - தி.க, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போன்று சிறிய நாற்காலியில் மெகா போனுடன் பிரச்சாரம் செய்வது - குறிப்பாக ஜனநடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் ஏழை மக்கள் (தலித்) வாழும் சேரிகளில் நடத்துவது

6. ஈத் பெருநாளை முன்னிட்டு பிறசமுதாயத்தவரை அழைத்து விருந்து பரிமாறி பிரசங்கம் செய்வது, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்துவது

7. மீலாது நபி விடுமுறையை பயன்படுத்தி முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களைப்பற்றி எடுத்துக் கூறுவது

8. கேபிள் டிவி நெட்வொர்க்கை பயன்படுத்தி தினமும் இஸ்லாமிய சொற்பொழிவு கேஸட்டுகளை ஒளிபரப்புவது - Dr. ZAKIR NAIK மும்பையில் செய்வது போன்று.

9. ரமளான் மாதத்தில் அனைத்து இயக்கத்தினரும் தனித்தனியாக ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பாது, மதியம் ஒன்று இரவு ஒன்று என இஸ்லாமிய ஒளிபரப்பு - குறைந்தபட்சம் அரை மணி நேரம், விளம்பரம் எதுவும் இடையில் இல்லாது, இயக்கப் பெயர், தனிநபர் பெயர் இல்லாது நடத்துவது

10. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறசமுதாயத்தவரை அழைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவது

11. வருடம் ஒரு முறை அல்லது இருமுறை இரத்ததான, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு சமயத்தவர்களை அழைத்து, அதில் பிரசங்கம் செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்துவது

12. மாதந்தோறும் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு சென்று கிறித்துவர்கள் போன்று நோயாளிகளை நலம் விசாரித்து ஆறுதல் கூறி பிரச்சாரம் செய்வது

13. இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் நேரம் அங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தோடு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப்பணிகளை மேற்கொள்வது. உதாரணம்- பூஜ், குஜராத் பூகம்ப நிவாரணம் - முஸ்லிம் இளைஞர்கள் இரத்த தானம், இந்துக்களுக்கு தாமாக முன்வந்து செய்ததன் விளைவு - தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்ட பள்ளிவாசல் இந்துக்களால் முஸ்லிம்களுக்கு திறந்து விடப்பட்டது.

14. முக்கிய செய்தித்தாள்களில் வாரம் ஒரு முறை முக்கிய தலைப்பின்கீழ் ஹதீஸ்களை வட்டார மொழியில் ஒரு தலைப்பின்கீழ் முதல் பக்கத்தில் வெளியிடுவது - உதாரணம் தினமணி - IFT வெளியீடு

15. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது பெயரில் நூலகம் ஒன்றை ஏற்பாடு செய்து இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் பொது புத்தகங்களை அனைவரும் (அனைத்து சமயத்தவரும்) வந்து படிக்குமாறு ஏற்பாடு செய்வது. உதாரணம் - சகோ. அபுஆஸியா நாகர்கோவிலில் "The Truth" என்ற பெயரில் நூலகம் திறந்து உள்ளார்.

No comments: